Thursday, May 1, 2008

நிஜமணிந்து...

அடி வயிற்றிலிருந்து துக்கம்
பீறிட,
அனைவரையும் கலங்கடித்த
அழுகை,
நாத்தனாரின் அழுகையை
விஞ்சியது.

சொத்து& பத்துக்களை
இனி பிரிப்பது எப்படி--?
என்கிற சோகம் மூத்த மகனின்
அழுகையில்
தொக்கி நின்றது.

பெற்றெடுத்த நால்வரில்
இனி யார் தான்
கஞ்சி ஊற்றுவார்கள்
என்கிற
கவலை
சுமங்கலியின்
தொண்டை குழியை
அடைத்தது.

சம்பிரதாய
சாங்கியம்
செய்து முடிக்க
கவலையோடு
காத்திருக்கும்
பங்காளிகள்.

எதிர்பார்ப்பில்,
அபகரிக்கும் ஆசையில்,
பொறாமையில்,
இப்படி
வெவ்வேறு சிந்தனையிலும்
எண்ண ஓட்டத்திலும்
துக்க வேடமணிந்து
சவத்தைச் சுற்றி பலர்...
ஆனால்,
நிஜமணிந்து சவம்.
- இன்னொருவன்.